கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை திருமணம் செய்யலாமா? திருமணமாகாதவர்களே கவனிக்கவும்! (7 உண்மைகள்)

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

July 9, 2013

[English Translation]

ஒரு கிறிஸ்தவர் கர்த்தரை விசுவாசிக்காதவரை திருமணம் செய்யலாமா? சற்று பொறுங்கள்…. “நான் விசுவாசி அல்லாதவரை நேசிக்கலாமா?” என்று பல நபர்கள் எங்களை கேட்பதுண்டு.

unequally-yoked

வேறு விசுவாச மார்க்கத்தாரை நேசிப்பதிலோ மனப்பதிலோ தேவனுக்கு ஏன் உடன்பாடு இல்லை? ஏன் தேவன் அதற்க்கு சம்மதிக்க மறுக்கிறார்?

இது வேற்று மத நம்பிக்கைகளை சகித்துக்கொள்ளும் அல்லது அவைகளுக்கு சம உரிமையளிக்கும் காரணங்களால் அல்ல. தேவன் இதை அனுமதிக்காததற்கு சில ஆழமாக வேர் பற்றியிருக்கிற பிரச்சனைகளே காரணம். முதலில், திருமணத்தைக் குறித்த தேவனுடைய திட்டங்களும் காரணங்களும் இந்த உலகம் நினைப்பதில் இருந்து வித்தியாசமானவைகள் என்று நினைவில் கொள்ள வேண்டும். திருமணத்தை தேவனுடைய பார்வையில் பார்க்க உலகத்தினால் கூடாது. முதலில், பரஸ்பர தேவைகளை சந்தித்துக் கொள்வதற்காகவே திருமணம் ஏற்படுத்தப் படுவதாக இந்த உலகம் நினைப்பதனாலேயே அதிகமான விவாகரத்துக்களை நாம் காண்கிறோம்.

திருமணத்திற்கு தேவன் கொடுக்கும் ஆலோசனை என்னவென்றால், அது தேவனை சார்ந்து, தேவனை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான். இப்படி உருவாக்கப்படும் திருமணங்கள் குடும்பத்தில் சமாதானத்தை கொடுப்பவையாக இருக்கும்.

நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 7 விஷயங்கள் உண்டு.

1. நாம் நம்முடையவர்கள் அல்ல

தேவன் நம்மை தம்முடைய சாயலில் சிருஷ்டித்திருக்கிறார். இயேசு நமக்காக சிலுவையில் மறித்து தம்முடைய இரத்தத்திற்கு நம்மை கிரயமாக கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழ்கிறார். நாம் அவருடைய ஆலயம். நாம் நம்முடய சித்தத்தின் படி செய்ய இந்த சரீரம் நம்முடையது அல்ல.

ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம்

2 கொரிந்தியர் 6:14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

2 கொரிந்தியர் 7:1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாக்குகிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.

நம்முடைய இலக்கு என்னவென்றால் “என்னுடைய அனைத்தையும் நீர் ஏற்றுக் கொண்டதற்காக நன்றி ஏசுவே” என்று நாம் கூறும் அளவிற்கு பாவத்திற்கு மரிப்பதே ஆகும்.

2. நம்மை கீழே விழத்தள்ளும் காரியங்கள்

திருமணதிற்கு முன்பே உடல் உறவு கொள்வது இப்பொழுது சாதாரணமான காரியமாக ஆகிவிட்டது. அனேக இளைஞர்கள் தங்கள் நேசிப்பவர்களுடன் உறவு கொண்டால் மாத்திரமே அவர்கள் உறவை தொடர முடியும் என்று நம்புகிறார்கள். இப்படிப் பட்ட காரியங்கள் தங்கள் குற்ற உணர்வை மேற்கொள்வதற்காகவே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இவர்களை ஆழ்த்தி விடுகின்றன.

ஆனால், உண்மைக்கும் நடைமுறைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. மெய்யான சிநேகம் இல்லாத காரணத்தால் இச்சையின் அடிப்படையில் முன்னேறும் பந்தங்கள் சீக்கிரம் தோற்றுவிடுகின்றன. பல உடைந்த திருமணங்களுக்கு இதுவே காரணமாக இருக்கிறது – இச்சை ஒரு போதும் திருப்தியடைவதில்லை.

உங்களை சத்தியத்தில் இருந்து வழி தப்பச் செய்யும் பந்தத்தில் இருப்பதை விட தேவனை துக்கப் படுத்தாமல் இருப்பதே உங்கள் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்!

முக்கியமான செய்தி: கடந்த கால பாவங்கள், தேவையற்ற குற்ற உணர்வு, மற்றும் வெட்கத்தினால் சத்ரு உங்களை தேவனுக்கு விருப்பமில்லாத உறவில் வைத்திருப்பதை தவிருங்கள். நீங்கள் இயேசுவினுடைய பிள்ளையாக இருப்பதனால் அவருடைய இரத்தம் உங்களை எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கிறது என்று நினைவில் கொள்ளுங்கள். ஆம் எல்லா பாவங்களிலிருந்தும்! அதனால் உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள் (1 யோவான் 1:9), மனந்திரும்புங்கள் (ரோமர் 2:4), ஒளியில் நடங்கள் (எபேசியர் 5:8-9), தேவனோடு ஒப்புரவாகுங்கள் (2 கொரிந்தியர் 5: 17-21)

3. உங்கள் துணைவர் உங்களுக்கு ஏற்றவராய் இருக்கிறாரா என்று தெரிந்து கொள்ளும் உண்மையான வழி

வெப்ஸ்டர் ஏற்றவரயிருப்பதை “இணக்கமாக வாழ முடிகிற தன்மை” என்று விவரிக்கிறது. பலர் இவ்வாறு இணக்கமாக வாழ முடிகிற தன்மையே அவர் சரியான துணை என்று முடிவு செய்ய தூண்டுகிறது. “ஆனால் அவள் என் ஜோக்குகளுக்கு சிரிக்கிறாள், அவர் என்னை நன்றாக புரிந்து கொள்கிறார், அவளுக்கு நான் பாடுவது மிகவும் பிடித்திருக்கிறது, அவருக்கு என் ஓவியங்கள் பிடித்திருக்கின்றன” இப்படிப் பட்டவைகளை கேட்டிருக்கிறீர்களா?

வேதாகமம் நமக்கு கற்றுக் கொடுக்கும் உண்மை என்னவென்றால், மனிதன் ஆதியாகமம் 3 -ல் கொடுக்கப்படிருப்பது போல் பாவத்தில் விழுந்தவுடன், நாம் நம்முடைய ஏற்புடைய தன்மையை இழந்துவிட்டோம் அதனால் நம் உறவுகள் உடைந்து விட்டன. ஆனால், இயேசு சிலுவையை சுமந்ததினால், அவர் நம் உறவின் மையமாக இருப்பதனால், நம்மால் ஒருவரை ஒருவர் நேசித்து இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டாகிறது. (ரோமர் 15:5)

நம் முன் வைக்கப்படும் ஒரு விவாதம் என்னவென்றால் விசுவாசி அல்லாதவரை மணப்பதே மேலானது என்பதே. கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நடந்தே திருமணங்கள் வெற்றியோடு இருப்பதை இவர்கள் உதாரணமாக காட்டுகிறார்கள். இவர்கள், சத்ரு விசுவாசி அல்லாதோரை குறித்து கவலையற்றிருக்கிறான் என்பதை மறந்து விடுகிறார்கள். இது தேவ கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திருமணத்தை தாக்கும் ஆவிக்குரிய தாக்குதலாக இருக்கிறது.

நீங்கள் பார்க்கும், கேட்கும் மற்றும் படிக்கும் காரியங்களை அடிப்படையாக வைத்து முடிவு எடுக்காதீர்கள். தேவ வார்த்தைகளில் இருந்து நீங்கள் செல்ல வேண்டிய வழியை அறிந்து கொள்ள முற்படுங்கள்.

பூரணமான திருமணங்கள் இல்லை, பூரணமான இயேசு மாத்திரமே நமக்கு உண்டு! உங்களுக்கு ஏற்புடைய துணையை தேர்ந்தெடுப்பதை விட, இயேசுவின் உண்மையான பிள்ளைகள் எதையும் மாற்றி அமைக்க வல்லவரான அவருடைய ஒரு உண்மையான பிள்ளையாக இருப்பவரை மணப்பதே நலமாக இருக்கும்.

4. நீங்கள் இழக்கும் ஆசிர்வாதங்களைப் பற்றி நினைவு கொள்ளுங்கள்

நாம் எடுக்கும் முடிவுகள் தொடர்ந்து வரப்போகிற பல தலைமுறைகளை வழிநடத்தும் என்பதை நாம் பல சமயங்களில் மறந்து விடுகிறோம்.

ஒரு மனப்பாடில்லாமல் இருவர் சேர்ந்து நடப்பது கூடாத காரியம் என்று ஆமோஸ் 3:3 கூறுகிறது. பின்னர், சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிற பிள்ளைகளோடு எப்படி ஒருமனம் இல்லாதவர்கள் ஒரே கூரையின் கீழ் இருப்பது என்று நீங்கள் சற்று கற்பனை செய்து பாருங்கள்.

உங்கள் குழந்தை எந்த விசுவாசத்தைக் கொண்டு வாழ வேண்டும் என்று அவரையே முடிவு செய்ய விட்டு விடுவேன் என்று தயவு செய்து சொல்லாதீர்கள், இது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறாக இருக்கும். வேதம் சொல்லுகிறபடி, உங்கள் பிள்ளைகளை தேவனைப் பற்றிய பயத்தோடு வளர்ப்பது பெற்றோரான உங்களது பொறுப்பாயிருக்கிறது. இயேசுவை விட்டு சற்று விலகி வாழ நினைக்கும் உங்களால் எப்படி இந்த பொறுப்பை நிறைவேற்ற முடியும்?

இப்படி ஒரு இணக்கமற்ற சூழ்நிலை உள்ள குடும்பத்தில் உங்கள் பிள்ளையின் மனதில் குழப்பங்கள் உண்டாவதுடன், அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது முரட்டாட்டமுள்ளவர்களாக மாறுவதற்கு இது வழி வகுக்கும்.

5. தேவன் கூறியுள்ள தரங்களை நிலை நிறுத்துங்கள்

“ஆனால் என்னால் அவரை இரட்சிப்புக்குள் நடத்த முடியும்”

இதை பல முறைகள் நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் ரட்சகரல்ல. இந்த மனநிலையை கைவிடுங்கள். இயேசுவிடம் அதை விட்டுவிடுங்கள். ஒரு மனிதரோடு உள்ள உறவுக்காக தேவனை விட்டு செல்ல மனதாயிருந்தீர்களானால் நீங்கள் உண்மையாக இயேசுவை உங்கள் தெய்வமாக ஏற்றுக்கொண்டிருக்க வில்லை என்பதை குறிக்கிறது. உங்களுக்காக உங்கள் துணைவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள சம்மதித்தாலும், அது உண்மையான இரட்சிப்பாக இருக்க முடியாது என்று அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு இளம் பெண் சமீபத்தில் என்னோடு ஒரு காரியத்தை பகிர்ந்து கொண்டார். அவர் ஈடுபாடு கொண்டிருந்த உறவு எல்லா வகையிலும் பூரணமாக தெரிந்த பொழுதிலும் அதில் தேவன் இல்லாத காரணத்தினால், நண்பர்களுடைய கேலிகளையும் பொருட்படுத்தாமல் அந்த உறவை அவர் துண்டித்ததாக எழுதியிருந்தார். அவருடைய நண்பர்கள் கேலி செய்தாலும், தான் எப்படி உணர்ந்தாரோ, அப்படியே தன் விசுவாசத்திற்காக அதை விட்டுக்கொடுக்க முன்வந்திருக்கிறார். (எரே 17:9; பிரசங்கி 9:3)

ஆம், நாம் எல்லோரையும் நேசிக்கும் படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். அனால் விசுவாசிகள் அல்லாதோரை நேசிப்பதும் மணப்பதும் வித்தியாசமான காரியங்கள்.

சாலமோன் ராஜாவிற்கு தேவன் கொடுத்த எச்சரிப்பு மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. மிகுதியான செல்வமும் ஞானமும் இருந்தும் அவர் கீழ்படியாமையினால் எப்படி விழுந்து போனார் என்று நாம் பார்க்கிறோம்.

இந்த நேரத்தில் ஒரு வல்லமையான வசனத்தை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. “இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.” நெகே 13:26 (அந்நிய ஸ்திரீகள் என்று இங்கு குறிப்பிடப் பட்டிருப்பது தெய்வ பக்தியில்லாத பெண்களையே ஆகும். இது வேற்று ஜாதியில் உள்ளவர்களை மணப்பதை குறிக்கவில்லை. இயேசுவை தங்கள் இருதயத்தில் கொண்டிருக்கும் வரை அவர்கள் ஒரே மனம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்)

அந்நிய நுகத்தில் சிக்கிகொள்ளதபடி நம்மை எச்சரிக்கிற பல வசனங்களை நாம் வேதத்தில் காணலாம். (2 கொரி 6:14; 1 கொரி 7: 39; உபா 7: 3,4; யோசுவா 23:12,13; எஸ்ரா 9:12) இது ஒரு உண்மையான கிறிஸ்தவர், இன்னொரு உண்மையான கிறிஸ்தவரை மாத்திரம் தான் மணக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

6. ஆனால் அது அந்த குடும்பத்தாருக்கு வெற்றியாகவே உள்ளது

இவை எல்லாவற்றையும் வாசித்தபின்னரும் சிலர், மற்றவர் இவ்வாறு செய்தும் நன்றாக வாழ்வதை சுட்டிக் காட்ட முற்படுவார்கள் என்று நான் அறிவேன். மற்றவர் தேவனை விசுவாசிக்காதவர்களை மணந்தும் அவர்கள் இரட்சிக்கப் பட்டார்கள் என்றால் தேவனுடைய கிருபைக்காக அவரை துதிப்போம். அனால் அது நாமும் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் நடக்கலாம் என்று அர்த்தமல்ல. வேதத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடப்பது எந்த ஒரு மனிதரின் வாழ்க்கை கொடுக்கும் உதாரணத்தையும் விட முக்கியமானது.

உங்கள் தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தேவனுடைய வார்த்தைகளை சார்ந்திருக்க வேண்டும் என்று உங்கள் மனதை வலிமையானதாக தயார் செய்யுங்கள். நீங்கள் யாரோடு சம்பந்தப் பட்டிருக்கிறீர்களோ அவர்களை அடிப்படையாக வைத்து தேவனோடு நீங்கள் கொண்டுள்ள ஐக்கியம் மாற இடம் கொடுக்காதீர்கள்.

பேஸ்புக்கில் கமெண்ட் செய்திருந்த ஒருவர் இவ்வாறு கூறுகிறார்

“அது சிலருடைய வாழ்வில் நடந்திருந்தாலும் தேவையற்ற வலிகளும், விளைவுகளும் இல்லாமல் நடந்திருக்க முடியாது. மேலும் அது தேவனுக்கு கீழ்படியாமல் போவதை காட்டுகிறது. தேவனுடைய ஒரு சாதாரணமான கற்பனைக்கு கூட கீழ்படியாமல் நாம் விசுவாசிகள் என்று எப்படி கூறிக்கொள்வது? தேவனுடைய திட்டங்களே எப்போதும் சிறந்தவையாக இருக்கின்றன”

வேதம் என்ன கூறுகிறதோ அதை தவிர வேறு எந்த விவாதத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. தேவ வார்த்தைகளுக்கு மாறாக உங்களை நடக்கச் சொல்லும் எந்த தூதர்களுடைய வார்த்தைகளுக்கும் செவி சாய்க்காதீர்கள் என்று அப்போஸ்தலர் பவுல் நம்மை எச்சரிப்பதை நினைவில் கொள்ளுங்கள். (கலா 1:8) இப்படியிருக்க, மற்றவருடைய உதாரணங்களும், தரிசனங்களும், தீர்கதரிசனங்களும் நம்மை வேறு வழியில் நடத்த இடம் கொடுக்காமல் நம்மை காத்துக்கொள்வது எத்தனை முக்கியமாக இருக்கிறது.

1 சாமுவேல் 2:30 கூறுகிறது, “ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” தேவனுக்கு கீழ்ப்படிவதே அவரை நேசிப்பதைக் காட்டுகிறது.

1 யோவா 5:3 “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.”

பேஸ்புக்கில் நாங்கள் கண்ட இன்னொரு சுவாரஸ்யமான கமெண்ட் இதோ

“இந்த கேள்விக்கு ஆனால், ஒரு வேளை என்ற பதில்களே இல்லை… தேவனை விசுவாசியாதவர்களை மணக்கக் கூடாது என்று வேதம் சொல்வதால் அதை செய்வது கூடாது. வேதம் பொய் சொல்வதில்லை, அதில் எந்த விதமான தவறுகளையும் உடையது அல்ல. தேவன் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார். அவர் ஒரு போதும் உங்களுக்கு கிறிஸ்தவர் அல்லாதவரை திருமணம் செய்ய அனுமதி கொடுக்க மாட்டார். ஏன் என்றால், அவ்வாறு செய்தால் அவர் பொய் சொல்கிறவராக ஆகி விடுவார், தேவன் ஒரு போதும் பொய் சொல்வதில்லை.”

7. தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை

பரலோகம் ஜெயிக்க முடியாத எந்த பிரச்சினையையும் பாதாளம் உருவாக்க முடியாது என்பதை நீங்கள் எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டிருக்கிரீர்கள் என்பதையும் விட அதிகமாக நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏசுவால் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை. நீங்கள் உங்கள் வாழ்கையை அவர் கரங்களில் ஒப்புக்கொடுக்கும் போது அவர் உங்கள் பிரச்சினைகளை சரியாக்குவார்.

தான் பூரணம் ஆனவராக இல்லாதவராக இருந்தாலும், யேசுவினுடைய கர்தத்துவத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் துணையை, தேவனுடைய உண்மையான பிள்ளையாக இருப்பவரை மணப்பதின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இதைக் குறித்த ஏதாவது வாதங்கள் உங்களுக்கு இருக்குமானால் கீழே எங்களோடு திறந்த மனோதோடு விவாதியுங்கள்.

நான் தெரிந்து கொள்ள விரும்புவது: நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், விசுவாசி அல்லாதவரை மறுப்பதில் உங்களுக்கு எந்த விதமான போராட்டங்கள் ஏற்படுகின்றன?

விவாதிப்பதற்கு: ஒரு ஸ்திரமான  முடிவை கடந்த காலத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலையை நீங்கள் கடந்து வந்திருப்பீர்களானால், எவ்வாறு உங்கள் காயப்பட்ட உணர்வுகளை கையாண்டீர்கள் என்று எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.