கனவுகள் தகர்ந்து தோல்வி நட்புகொள்ளும்போது

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

November 29, 2013

[English Translation]

L8U0868

17 ஜனவரி 2010 எனக்கு ஒரு மிக நல்ல பிறந்த நாளாக அமைந்தது. தேவனோடு பிரமாதமாக நேரம் செலவழித்தும், தேவன் அனுப்பிய நண்பர்களோடு நேரம் செலவழித்தும் இந்த நாளில் மகிழ்ந்தேன். என் பேஸ்புக் இன்பாக்ஸில் குவிந்த வாழ்த்துக்களைக் கண்டு பூரித்தேன். வாழ்த்திய ஒவ்வருவருக்கும் பதில் அனுப்பும்படி வாஞ்சிக்கிறேன். நண்பர்கள் தேவனுடைய ஆசிர்வாதமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். நேரம் செலவழித்து என்னை வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன், எனக்காக தொடர்ந்து ஜெபிக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் ஜெபக் குறிப்புகளோடு கூடிய மாதாந்திர செய்தி இதழையும், எங்கள் பயண விவரங்களையும் பெற்றுகொள்ளும்படி இங்கு எங்களோடு நீங்கள் பங்காளராகலாம்.

நீண்ட நேர யோசனைக்குப் பின்பு, இதை வாசிப்பவர்களுக்கு ஊக்கமாக அமையும் என்று தோன்றியதால் இதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். கடந்த வருடத்தில் பல வித்தியாசமான அனுபவங்கள் என் வாழ்வில் வந்த போதிலும், என்னை பக்குவப்படுத்தும் வருடமாக அமைந்தது. ஊழியத்தைக் குறித்த என் இருதயத்தின் சிந்தனைகளில் புதிய கோணங்களை தேவன் உண்டாக்கினார்.

என்னுடைய ஒரு கனவு உடைந்த நேரம் தான் ஒரு மிக முக்கியமான நேரமாக இருந்தது. ஒரு வருததிர்க்கும் மேலாக (2009 இன் துவக்கம் முதல்) இங்கிலாந்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட வேதாகம கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தேன். அந்த கல்லூரியில் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருந்தேன். குளிர் காலங்களில் அணிவதற்காக சில பிரத்யேக ஆடைகளையும் வாங்கினேன். அங்கு செல்வதற்கான நுழைவுரிமை பெறும்படியாக விண்ணப்பித்தேன். அதை பெறுவது மிகக் கடினமான ஒன்றாகும். புதிய அனுபவங்களை பெறப் போவதைக் குறித்தும், ஒழுங்கான வேத தியானத்தை ஆரம்பிக்கப் போவதையும், நான் எந்த வேதாகம கல்லூரியில் பயின்றேன் என்று கேட்பதை ஜனங்கள் இனி நிறுத்திவிடுவார்கள் என்பதைக் குறித்தும் உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், எனக்கு நுழைவுரிமை கிடைக்கவில்லை என்று அறிந்ததும் மிகவும் உடைந்துபோனேன்.

நிராகரிக்கப் படுவதும், நுழைவுரிமை கிடைக்காமல் இருப்பதும் அது எனக்கு புது அனுபவம் இல்லை. ஆனாலும் இந்த முறை தகர்ந்து போனது ஒரு ஆவிக்குரிய கனவாகும். நான் நிராகரிக்கப் பட்டதை எல்லோரிடமிருந்தும் மறைத்து விட்டேன். ஆனால் என் உள்ளத்தில் மிகவும் நொறுக்கப் பட்டவனாக இருந்தேன். தேவன் ஏன் ஒரு ஆவிக்குரிய குறிக்கோளைக் குறித்து அன்பற்றவராக இருக்கிறார் என்று வியந்தேன். பரலோகமும் எனக்கு உதவவில்லை; எப்பொழுதும் போலவே அமைதியாகவே இருந்தது. என் இருதயத்தின் வலிகளுக்கு மரத்துப் போனவனாக வாழ்வதற்கு முயற்சி செய்தேன். ஒரு மாதம் கடந்து போனபோது என் ஜெப வாழ்கையில் போராடுகிறவனாக காணப் பட்டேன். தேவனால் நிராகரிக்கப்பட்டவனாக உணர்ந்தேன்.

கடைசியாக இந்தப் பிரச்சினையை சந்திப்பது என்று முடிவு செய்தேன். சாலையில் பயணித்துக் கொண்டு இருக்கும் பொழுது இதைக் குறித்து ஜெபிக்க ஆரம்பித்தேன். இருட்டான நேரமாக இருந்ததால் என் கண்ணீர் என்னை சுற்றி இருந்தவர்களுக்கு தெரியவில்லை. சாலையில் சென்று கொண்டிருந்த வண்டிகளின் இரைச்சலில் என் இருதயத்தை அமைதிப் படுத்த முயன்றேன். தேவனை நோக்கி, “ஏன் இதை அனுமதித்தீர்? என் செயல்களினால் கோபமாக இருக்கிறீரா? தயவு செய்து என்னோடு பேசும் தேவனே” என்று கேட்க ஆரம்பித்தேன்.

நான் எவ்வளவு பேசினேனோ தேவன் அவ்வளவு அமைதியாக இருந்தார். இறுதியாக கேள்விகேட்பதில் இருந்து, என் வாழ்வில் தேவன் கொடுத்திருந்த மற்ற காரியங்களுக்காக நன்றி செலுத்த துவங்கினேன். என் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும் போது, ஆவியானவரின் ஒரு வித்தியாசமான குரல் எனக்குள் ஒலித்தது. அவை, சாதாரணமான ஆனால் வலிமை வாய்ந்த “நான் உன்னை நேசிக்கிறேன்” என்பவையே.

நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறுகிறீரா? உண்மையாகவா!?! அது ஒரு தமாஷைப் போல் இருந்தது. போதகனுக்கு போதனையாக இருந்தது. தேவன் நேசிக்கிறார் என்று எனக்கு தெரியும். எனக்கு இன்னும் அதிகமான வார்த்தைகள் தேவைப் பட்டன. பரலோகம் திறப்பதை கேட்க வேண்டி இருந்தேன். தியானித்து ஆராய்ச்சி செய்யும்படியாக சில கடினமான வசனங்களை கொடுப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்ற இந்த வார்த்தைகள் என் கேள்விகளுக்கு நல்ல பதிலாக எனக்கு காணப்படவில்லை. திருப்தியாகாத, கேள்வி கேட்கும் என் இருதயத்திடம் நான் உன்னை நேசிக்கிறேன் என்று நம்புகிறாயா என்று ஆவியானவர் கேட்டார். அதற்கு நான், “ஆம்! ஆம் நீர் என்னை நேசிக்கிறீர் என்று நம்புகிறேன்” என்று கூறினேன். அதற்கு ஆவியானவர் கூறியது இதை நான் கண்ட கோணத்தை முற்றிலும் மாற்றியமைத்தது. ஆவியானவர், “அப்படியானால், என்னை 100% விசுவாசி” என்று கூறினார்.

அது என் இருதயத்தில் மின்னலைப் போல் இருந்தது. நான் ஒரு நொடி ஸ்தம்பித்து, என் கண்ணீரை துடைத்தேன். என் இருதயத்தில் ஒரு பலன் வந்தது. என் ஆவியில் ஒரு புதிய வெளிப்பாடு ஊர்ந்து வந்தது. தேவன் என்னை நேசிக்கிறார் என்று நான் நம்புவேனானால், எல்லா பாதைகளிலும் அவரை விசுவாசிப்பேன்! எத்தனை முறை காரியங்களின் துவக்கத்தில் தேவனை நம்புவதும் இறுதியில் சுயமாக காரியங்களை நிறைவேற்றவும் செய்திருக்கிறோம்? தேவன் முழுமையான ஒப்புக்கொடுத்தலை நம் வாழ்வில் எதிர்பார்க்கிறார்.

இது ஆசிர்வாதங்களை குறித்த என் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது. என் வாழ்வில் நான் எங்கு இருக்கிறேன் என்பதைப் பற்றியல்ல, தேவன் என்னை எங்கு இருக்கும் படி விரும்புகிறார் என்பதைப் பற்றினது. “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கை விட்டீர்” என்று கேட்டு, மூன்று ஆணிகளால் கடாவப் பட்டு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதும் இயேசு கிறிஸ்து தேவனின் சித்தத்தில் நிலைத்திருந்தார்.

கடந்த வருடத்தில் என்ன கற்றுக் கொண்டேன் என்று ஒருவர் என்னைக் கேட்ட போது இதை நினைவு கூர்ந்தேன். நான் கற்றுக் கொண்ட ஒரு பாடம் என்னவென்றால்,

வெற்றிபெறாமை தோல்வி அல்ல; காலத்திற்கு முன் கிடைக்கும் வெற்றியின் ஆபத்துகளில் இருந்து தேவன் உங்களை காக்க விரும்புகிறார் என்பதே ஆகும்.

பலவேளைகளில், வெற்றி பெறுவதற்கு பண்படாததாலேயே நம்மால் வெற்றி காண இயலவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். தேவனுக்கு உகந்த வேலை நம்மை வெற்றியின் மற்ற பாதிப்புகளுக்கு தயார் செய்கிறது. பெருமை, பொல்லாங்கு, மற்றும் பாவத்தில் இருந்து அது நம்மைக் காக்கிறது. தேவனுடைய வேளை நம் வேளையைக் காட்டிலும் அழகானது.

தேவனுடைய வழிகள் எவ்வளவு வித்தியாசமானவை என்று நமக்கு விளங்கச் செய்யும் சில வசனங்கள் இதோ. ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! ரோமர் 11:33. “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” பிரசங்கி 3:11

ஆகையால், அவரை தொடர்ந்து விசுவாசிப்போம்.

கேள்வி: தேவனை முழுமையாக நம்புவதற்கு கடினமான பகுதிகள் ஏதாவது உங்களுக்கு உண்டா? தோல்வியை எப்படி கையாள்கிறீர்கள்?